ஜாதிக்காய் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மலைப்பாங்கான குளிர்ச்சியான இடங்களில் வளரும் ஒரு வகை மரத்தின் காயின் விதைப்பகுதிதான் ஜாதிக்காய் ஆகும். தமிழகத்தில் ஏற்காடு, குற்றாலம், கொல்லிமலை போன்ற குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் இது அதிகமாக விளைகின்றது.

சதைப்பற்றாக இருக்கும் ஜாதிக்காய் கனியின் மேல் தோலை அப்படியே துண்டுதுண்டாக அரிந்து மாங்காய், எலுமிச்சம்பழம் போன்று ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருப்பதோடு ஜாதிக்காயின் நன்மைகளை அடையலாம்.கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி. இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.

ஜாதிக்காய் அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை. அவை என்ன வென்று பார்ப்போம்:

இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள்.

மேலும், மைரிஸ்டிசின், வாசனைத்  திரவியங்கள்,  முகப்பூச்சு,  பற்பசை மற்றும்  வாய் கொப்பளிக்கும்  தைலங்களிலும்  பயன்படுகிறது.ஜாதிக்காய்  எண்ணெயில்  அடங்கியுள்ள  மைரிஸ்டிசின்  பலவிதமான  நோய்களை  குணமாக்குகிறது.  ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின்  என்னும் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை  வாதம் மற்றும்  தசை பிடிப்பிற்கு  மருந்தாகவும்,  பாக்டீரியா மற்றும்  கரப்பான்  கொல்லியாகவும்  பயன்படுகிறது.

ஜாதிக்காய் பொடியை  சிறிது பாலில்  கலந்து  மூன்று வேளை சாப்பிட  வயிற்றுப்போக்கு சரியாகும். உடல் சுறுசுறுப்படையும். ஜாதிக்காயை சந்தனத்துடன்  அரைத்து, முகத்தில் பற்றுப்போட முகப் பரு, கரும்புள்ளிகள்,  தழும்புகள்  நீங்கும்.பல்வலி  உள்ள இடத்தில்  இரண்டு சொட்டு ஜாதிக்காய்  எண்ணெயை  

தடவினால்  பல் வலி நீங்கும்.

ஜாதிக்காய்ப் பொடி  அரை ஸ்பூன்  சூடான பாலில் கலந்து  குடித்தால்  தூக்கம் நன்றாக  வரும்.ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது.ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிட்டு வர, மனஅழுத்தத்தைப் போக்குகிறது. நரம்பு மண்டலங்களை தூண்டி சுறுசுறுப்பாக  செயலாற்ற வைக்கிறது.

தொகுப்பு : எஸ். மாரிமுத்து

Related Stories: