சருமத்தை வளமாக்கும் வால்நட் எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்ட வால்நட். உடலுக்கும்,  மூளைக்கும்  பல்வேறு நன்மைகளை செய்கிறது., சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் கூட  வால்நட் அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்:

வால்நட்டில் காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால், வால்நட் எண்ணெயை  தினமும்  தடவி வர, தலையில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியை தூண்டும்.

பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெயை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம்.

இரவில், இந்த எண்ணெயை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும். வால்நட் எண்ணெயைக் குளிக்கும் தண்ணீரில் சிறிது சேர்த்துக் குளித்து வந்தால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளுடன் ஏற்படும் அழற்சி பிரச்சினை தீரும். குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெயை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும்.

வால்நட் எண்ணெயை தலையில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும். வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: