பாப்பா நலமா? பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலத்தின் வசிப்பிடங்கள். அதிலும் புத்தம் புதிதாய் பிறந்த பிஞ்சுக் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என எப்போதும் யாராவது வந்து கொண்டேயிருப்பார்கள். குழந்தையைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லி குழந்தை வளர்ப்புக்கு ஆளுக்கு ஒரு டிப்ஸ் அள்ளிவிட்டுச் செல்வார்கள்.’

இந்த பேபி சோப் போடு. ரொம்ப நல்லது’ என்று சொல்லிவிட்டுச் செல்வார் ஒருவர்.’அச்சோ! அதெல்லாம் கெமிக்கல். பயத்தம் பருப்பு மட்டும் போதும். வேற எதுவும் வேண்டாம்’ என்று அலறல் அட்வைஸ் சொல்வார்இன்னொருவர். பெற்றவர்களுக்குத்தான் குழம்பிப்போகும். ’குழந்தை விஷயம் ஆச்சே ரிஸ்க் எடுக்க முடியுமா?’ எனத் தவிப்பார்கள். பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கான முக்கியமான டிப்ஸ் என்னென்ன வாங்க பார்க்கலாம்…

தாய்ப் பால் அவசியம்!

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால் குழந்தைக்கு இன்ஃபெக்‌ஷன் எனப்படும் நோய்தொற்று ஏற்படக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. எனவே தண்ணீர்கூடத் தரத் தேவை இல்லை. அவசியம் எனில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் தரலாம்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் எனில் தாய்ப்பாலை சுத்தமான எவர் சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடிபோட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். இதனைக் குழந்தைக்குத் தேவைப்படும்போது எடுத்துப் புகட்டலாம். ஃபிரிட்ஜில் வைத்த பாலைக் கொதிக்கவைக்கக் கூடாது. ஒரு மணி நேரம் வெளியே வைத்துக் குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த பாலை 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது பால் வழிந்து கழுத்து, தோள்பட்டை மேல் பட வாய்ப்பு உள்ளது. இதை சுத்தம் செய்யாமல்  அப்படியே விட்டால் சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, குழந்தையின் உடலை, பால் குடித்து முடித்ததும் சுத்தமாகத் துடைக்க வேண்டும்.தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை ஃபீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், மூன்று வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமம். ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தினால் தரமான பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தவும். ஒவ்வொருமுறையும் அதனைப் பயன்படுத்திய பிறகும் வெந்நீரில் கழுவி உலரவைக்க வேண்டும்.

தூக்கம் முக்கியம்!

முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். அதற்குப் பிறகு, தூக்கம் படிப்படியாகக் குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரசாயனக் கொசுவர்த்திகள், கிரீம்கள், மேட்கள், லிக்யுட்கள் போன்றவற்றைவிட கொசுவலையே சிறந்தது. கொசு பேட் பயன்படுத்துவதும் நன்றே.

குழந்தைக்குத் தூக்கம் கெடும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் தூங்கும்போதுதான் குழந்தையின் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமாக நடைபெறும். இதனால், தூங்குவது கெட்டால், ஆரோக்கியம் கெட்டு, வளர்ச்சியும் கெடும். எனவே, தூக்கம் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். தூங்கும் குழந்தையை தேவை இல்லாமல் எழுப்பக் கூடாது. சிலர் நம்மை போலவே குழந்தையும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இது தவறான சிந்தனை. வளர்ந்தவர்களின் உடலுக்கு குழந்தைகளின் உடலுக்கும் வித்தியாசம் உள்ளது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏழாம் மாதம் திட உணவு!

ஏழாவது மாதத்தில் இருந்து திட உணவைக் கொடுக்கத் தொடங்கலாம். சிலர் செரிமானம் எளிதாக இருப்பதற்காக நன்கு குழைந்த மோர், தயிர் சாதம் மட்டும் கொடுப்பார்கள். இதனோடு, குழந்தைக்குப் பருப்பு சாதமும் கொடுக்க வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் பி, நார்சத்து ஆகியவை சேரும். ஒரு வயது நிறைவடையும் வரை பசும்பாலைத் தவிர்ப்பது நல்லது. இதனால், குழந்தையின் செரிமானத்திறன் மேம்படும். பருப்பு சாதத்தை மதியம் மட்டுமே தருவது நல்லது. அது செரிமானத்துக்கு துணை செய்யும்.

சூரிய ஒளி தரும் வைட்டமின் டி!

காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக் கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்கவைப்பதால், வைட்டமின் டி சத்து கிடைக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி அடிப்படைத் தேவைகளில் ஒன்று. எனவே, தவறாமல் தினசரி குழந்தைகளை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்திருங்கள்.

ஆடைகள் கவனம்!

குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகள் சிறந்தவை. எப்போதும் குழந்தைகளுக்கு சுத்தமான சற்றே தளர்வான பருத்தி ஆடைகளையே பயன்படுத்துங்கள். சிறுநீர், மலம் கழித்தால் உடனடியாக வேறு ஆடையை மாற்றிவிட வேண்டும். இது மிகவும் முக்கியம். அதே போல் தாய்ப் பால் கொடுத்த பின்பும் பால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சிந்தியிருந்தால் அவசியம் எனில் ஆடையையும் மாற்றிவிடுவதே நல்லது.

சிந்தடிக் பேக் வேண்டாமே!

தற்போது கைக்குழந்தைகளை, முதுகில் சுமக்கும் சிந்தடிக் பேக்குகளில் தூக்கிக்கொண்டு போவது நாகரிகமாகிவிட்டது. இது தவறு. சிந்தடிக் ரப்பர் மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்குகள் குழந்தையின் தோலை உறுத்தும். அசெளகர்யமான உணர்வைத் தரும். மேலும் சில குழந்தைகளுக்கு இதனால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மேலும் தரமற்ற சிந்தடிக் பேக்குகள் கிழிந்து போகவும் வாய்ப்புள்ளது. எனவே, சிந்தடிக் பேக்கில் குழந்தைகளைத் தூக்கிச் செல்வதைத் தவிர்ப்பதே நல்லது.

டயாப்பரை கையோடு மாத்துங்க!

குழந்தைகளுக்கான டயாப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். மேலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் டயாப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது. அதே போல் எப்போதும் குழந்தையை டயாப்பரோடு இருக்க விடுவதும் நல்லதல்ல. சிறிது நேரம் காற்றோட்டமாக இருப்பது குழந்தைக்கு மிகவும் ஃப்ரீயாக இருக்கும். எந்நேரமும் டயாப்பரைப் போட்டு அடைத்து வைத்திருக்க வேண்டாமே. சிறுநீர் அல்லது மலம் கழித்த சிறிது நேரத்துக்கு அப்படியே காற்றோட்டமாக இருக்கலாம் தவறில்லை.

பவுடருக்கு தடா!

குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்கள் எதுவும் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளின் சருமத்தில் வியர்வைத் துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம். பிறந்த குழந்தைகளுக்குக் கண்மை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் இன்று சந்தையில் கிடைக்கும் கண்மைகளில் பெரும்பாலானவற்றில் செயற்கையான பொருட்கள் நிறைந்துள்ளன என்பதால் அவற்றால் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குளியல் கவனம்!

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடலில் தடவி மசாஜ் செய்வது நல்லது. கண், மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் பி.ஹெச் லெவல் குறைவான சோப்புகள் அல்லது பயத்தம் பருப்பு போட்டு குளிக்க வைக்கலாம். தலைக்குக் குளித்ததும் தலையை நன்றாகத் துவட்ட வேண்டும். இல்லாவிட்டால் சளிப்பிடிக்கும்.

குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்கவைப்பதால், மருத்துவரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மசாஜ் செய்வது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் தாமாக நகரும் தன்மை இல்லாதவை என்பதால் அவற்றின் தசைகளில் ஒருவித நலுங்கு சேர்ந்திருக்கும். குளிக்க வைக்கும்போது, கை கால்களையும் உடலையும் மென்மையாக பிடித்து அழுத்திவிடுவது அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும்.

வசம்புக் கயிறுக்கு நோ!

வசம்புக்கயிறை குழந்தைகள் கையில் கட்டிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனை, குழந்தை வாயில் வைக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி அவசியம்!

குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பூசி போட வேண்டும். குழந்தை வளர்ந்து 16 வயதை நெருங்கும் வரை பல்வேறு வகையான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதால் சின்னம்மை, பெரியம்மை, ஹெபடைட்டிஸ் எனும் மஞ்சள் காமாலை, ரூபெல்லா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள், போலியோ போன்ற முடக்க நோய்கள் உட்பட பல்வேறு நோய்களை வென்று ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய காலத்தில் அந்தந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது.

 

தொகுப்பு : என். யுவதி

Related Stories: