நன்றி குங்குமம் டாக்டர்
நாம் வெளியே செல்லும்போது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கிவிடுகின்றன. இதனால், முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகைச் சீர்குலைக்கின்றன. அதிலிருந்து சரும அழகைப் பாதுகாக்க, முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும்.
பொதுவாக, நமது உடலில் இருக்கும் செல்கள் புதிதாகத் தோன்றுவதும், பிறகு அழிவதும் மீண்டும் தோன்றுவதுமாக இருக்கும். இப்படிச் சுழற்சிமுறையில் அவை சீராக இயங்கும்போது முகத்தில் சருமத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இப்படியான செல்களின் சுழற்சி சீராக இருக்கும் வரை முகம் களைப்படையாது, சோர்வடையாது. எப்போதும் பொலிவாகவே இருக்கும். ஆனால், இந்த செல்கள் இறந்து வெளியேறாமல் சருமத்துவாரங்களில் அடைபட்டு இருக்கும்போது பருக்கள் உருவாகக்கூடும். இப்படித் தொடர்ந்து இறந்த செல்கள் வெளியேறாமல் போகும்போது முகத்தில் பருக்கள் அதிகமாவதோடு சருமமும் பொலிவிழந்துபோகிறது. இதற்கு, உரிய பராமரிப்பு எடுத்துக்கொண்டால் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவாகும்.வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இறந்த செல்களை எப்படி நீக்குவது என்பதைப் பார்ப்போம்…இறந்த செல்களை நீக்குவதில் வாழைப்பழம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ஒரு வாழைப் பழத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸ்யில் தண்ணீர் விடாமல் அரைத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, ஒரு தேக்கரண்டி பால் பவுடர் ஆகியவற்றைக் கலந்து நன்கு குழைத்து, முகத்தில் எல்லா இடங்களிலும் தடவிக்கொள்ள வேண்டும். முகம் முதல் கழுத்து பகுதி வரை தடவ வேண்டும். பின்னர், ஒரு பதினைந்து நிமிடம் வரை வைத்திருந்து நன்கு உலரவிட்டு பிறகு குளிர்ந்தநீர் கொண்டு சருமத்தைச் சுத்தமாக துடைத்து எடுத்துவிட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்களுடைய சருமம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும். இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறச் செய்யும். முகமும் பொலிவாகும்.
தொகுப்பு : ரிஷி