மேட்டுப்பாளையம் அருகே பாக்குத்தோப்பில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து யானைகள் அட்டகாசம்

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட புளியமர தோப்பு பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புளியமரத்தோப்பு பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார். நேற்று காலை 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளன.

ஊருக்குள் சுற்றித்திரிந்த யானைகள் பின்னர் கோவர்த்தனனின் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர்,அங்கு பயிரிடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் தங்களது பகுதியில் அதிகரித்துள்ளதாகவும், விளை நிலங்களுக்குள் புகுந்து விடும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்தில் விலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் இல்லாத காரணத்தாலேயே அவை ஊருக்குள் வருகின்றன. எனவே, வனப்பகுதியிலேயே வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர்  கிடைக்க வனத்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: