கால் ஆணி மற்றும் பித்த வெடிப்பு

நன்றி குங்குமம் தோழி

கால் ஆணி

மனிதர்களாகிய நாம் காடு, மலை, மேடு எல்லாம் சுற்றித்திரிந்து படிப்படியாக நவநாகரிகம் பெற்று நிலவில் கால் பதித்து இன்று செவ்வாய் கிரகம் வரை செல்ல ஆயத்தமாவதற்கு ஆதி காரணம் நமது கால்கள் தான். கால்கள் இல்லையேல் மரம் போல் ஜடம் போல் நாம் இருந்திருக்கக் கூடும்.  ஆனால், நாமோ முகத்திற்கும், தலைமுடிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கால் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. மனிதனின் முக்கிய உறுப்புகளான காலைக் குறிவைத்து சில நோய்கள் வருவதுண்டு. உடம்புக்கோ உயிருக்கோ அதிக தீங்கு விளைவிக்காவிட்டாலும், கால்களுக்கு இவை அதிக உபாதை தரக்கூடிய நோய்களில் கால் ஆணியும், பித்த வெடிப்புகளும் முக்கியமானவையாகும். உலக அளவைவிட இந்தியாவில் இதன் சதவீதம் சற்று அதிகமாக உள்ளது.

கால் ஆணிக்கான காரணம்

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அதிக உடல் எடை காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது. கால் ஆணி என்பது இறந்த செல்களின் தொகுப்பேயாகும். ஆங்கிலத்தில் இதை ‘காலஸ்’ (callus) என்றும் கார்ன் பூட் (corn foot) என்றும் சொல்வார்கள்.

காலில் ஆணி வந்து விட்டால், பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

அடையாளங்களும் அறிகுறி குணங்களும்

கால் ஆணியினால் ஏற்படும் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே காணப்படும். அவை:

*வலி -  முக்கியமாக அந்த இடத்தில் அழுத்தம் உண்டாகும்போது தீவிர வலி

*கடினமான, தடித்த தோல்.

*பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாக தோற்றமளித்தல்.

*பாதிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் ஏற்படுதல்.

*நடப்பதில் ஏற்படும் சிரமம்.

கால் ஆணி யாருக்கெல்லாம் ஏற்படும்?

கால் பெருவிரல் வீக்கம், வியர்வை சுரப்பி பாதிப்பு, காலில் வடுக்கள் மற்றும் மருக்கள் உள்ளவர்களுக்கு கால் ஆணி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காலில் ரத்த ஓட்டம் குறைவதால் கால் ஆணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொருத்தமற்ற ஷூக்கள் மற்றும் காலணிகளைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளங்கால்கள்/ தோல், காலணிகளுடன் மீண்டும் மீண்டும் உராய்தல் போன்றவையே பெரும்பாலும் கால் ஆணி ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள் ஆகும்.

சிலருக்கு கால்களில் உடல் கூறியலில் சில மாற்றங்களால் கால் ஆணி ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. உதாரணமாக தட்டை பாதம் (flat foot), கப்பைக்கால் மூட்டு (genu valgum deformity of knee), கால் விரல்களின் அசாதாரணம், வளைந்த வடிவத்தை உடைய நகம், கால் கட்டை விரல் கோணி இருப்பது (Hallux Valus, Hallux Varus Deformity) போன்றவையும் கால் ஆணி ஏற்பட காரணியாக இருக்கின்றன. ஹை ஹீல்ஸ் காலணிகளை உபயோகித்தல், கால்களில் அழுத்தத்தை அதிகரிப்பதினால் இந்நிலை மேலும் சிக்கலடையச் செய்கிறது.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.காலின் தோற்றத்தை பார்த்தே அது கால் ஆணி என எளிதில் கண்டறியலாம். ஆணிகளை கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க ரத்தம் அல்லது இமேஜிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை.

சுய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகள்

*காலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வெண்டும்.

*காலணி மற்றும் தோல் / உள்ளங்கால்களுக்கிடையேயான உராய்வை தடுக்க இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

*கால் ஆணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேங்காய் எண்ணெய் வைத்து தேய்த்து வர சருமம் மென்மையாகி விடும்.

*வெந்நீரை நிரப்பி அதில் கல் உப்பு சேர்த்து காலை அதனுள் சிறிது நேரம் மூழ்கி வைக்க கால் தோல் மென்மையாகும்.

*எப்போதும் மென்மையான காலணி அணிய வேண்டும்.

*ஆயுர்வேத முறையில் அக்னிகர்மா (cauterization) சிகிச்சை செய்து கொள்ளலாம். இம்முறையில் கால் ஆணி, வேரோடு எடுக்கப்படும்.

*எருக்கின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஆர்ககிஷீரத்தத்தில் கருத்தவட்டு என்னும் ஆயுர்வேத மருந்தை உரைத்து பற்றிட்டு வர நாளடைவில் கால் ஆணி குணமாகும்.

*லேகனம் (ஸ்கிராப்பிங்) என்னும் ஆயுர்வேத சிகிச்சை முறையின் மூலம் தோலின் கடினமான பகுதியை அகற்றி இந்நிலைக்கு சிகிச்சையளிக்கலாம்.

*குக்குலுதிக்தக நெய், குக்குலு பஞ்சபல சூரணம், பல்லாதக நெய் யொகராஜ குக்குலு, பஞ்ச திக்த கிருத குக்குலு ஆகிய ஆயுர்வேத மருந்துகளை உள்ளுக்கு பயன்படுத்தலாம்.

கால் ஆணியைக் குணப்படுத்துவதாக எண்ணி நீங்களாகவே வீட்டிலேயே சுய மருத்துவ சிகிச்சைகளை முயல வேண்டாம். அந்தப் பகுதியைக் கீறி ஆணியை எடுக்க முயல்வது கால்களில் தொற்றை - இன்ஃபெக் ஷன் (infection) ஏற்படுத்தி, பாதிப்பைத் தீவிரப்படுத்திவிடும், மற்றும் மீண்டும் மீண்டும் அந்த பாதிப்பு தொடரவும் காரணமாகிவிடும். எனவே, முறையான மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

பித்த வெடிப்பு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பித்த வெடிப்பு பிரச்சினையானது தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கால் பாதங்களில் ஏற்படும் சிறு சிறு வெடிப்புகளையே பாத வெடிப்பு அல்லது பித்த வெடிப்பு என்கிறோம். ஆயுர்வேத மருத்துவம் இவ்வியாதியை வைபாதிகம் என்று விவரிக்கின்றது.  இதை ஆங்கிலத்தில் கிராக் பூட் (crack foot) என்றும் ஹீல் பிஷ்ஷர் (heel fissures) என்றும் அழைக்கிறார்கள்.

பாத வெடிப்பிற்கான காரணங்கள்

வாதம் அதிகரிப்பதன் காரணமாக தோல் வறட்சி உண்டாகிறது. அதிக உடல் எடையும் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில் இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். இது மெத்தை போல் மென்மையைத்தரும், உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி உராய்வுகளை ஏற்படுத்தி தோலில் வெடிப்பு உண்டாகும். பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னர்தான், நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். சில நேரங்களில் இதன் மூலம் தொற்றும் ஏற்படும், இது வேறு சில உபாதைகளையும் தரக்கூடும்.

காலினை அழுக்காக வைத்திருத்தல் மற்றும் அழுக்கான இடங்களில் நடந்து விட்டு சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருத்தல் போன்ற காரணங்கள் பித்த வெடிப்பினை சிக்கலடையச் செய்கின்றது. தண்ணீரில்  காலினை அதிகநேரம் வைத்திருப்பவர்களுக்கு பாத பித்த வெடிப்பு அதிகமாக வர வாய்ப்புகள் உண்டு.

தடுப்பதற்கான வழி முறைகள்  

1.வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக்  கழுவ வேண்டும்.

2.அதோடு கால்களை சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

3.பாதாப்யங்கம் முறையில் கால்களுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆயுர்வேத தைலங்களை முறையாக தினசரி தடவி வர தோல் மென்மையாக இருக்கும்.

4.மருத்துவர் பரிந்துரைக்கும் காலணியை அணிய வேண்டும்.

5.இளஞ்சூட்டு நீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கால்களை  சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

6.படிகாரக்கல் கொண்டு வாரம் இருமுறை பாதத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

7.காடி நீரில் கால்களை வாரம் ஒரு முறை ஊற வைக்கலாம்.

8.வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், மிகவும் லேசான தோல்களையுடைய, திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.

9.உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

10.அமிர்த வெண்ணெய், மது சிஸ்ட்டாதி லேபம், ஷததௌத கிருதம், ஜாதியாதி கிருதம், வைப்பதிக்க மலஹர லேபம், சிந்துராதி லேபம், பஞ்சவல் கலதைலம் போன்றவற்றையும் வெளி பூச்சாக பயன்படுத்தலாம்.

11.பஞ்ச திக்த கிருத குக்குலு, குக்குலு திக்த கிருதம், மஞ்சிஷ்டாதி கஷாயம், கைசோர குக்குலு, சாரிபாதி ஆசவம், தான்வன்தர தைலம், சந்தனாசவம், க்ஷீரபல  ஆவர்தித தைலம் உள்ளுக்கு கொடுக்கலாம்.

12.தொற்றிருக்கும் சமயங்களில் ஈரப்பதமூட்டும் பொருட்களையும் எண்ணெய்களையும் பயன்படுத்தக் கூடாது. மஞ்சிஷ்டாதி கஷாயம், அம்ருதா கஷாயம், கைசோர குக்குலு, குடூசி சத்வம் போன்ற மருந்துகளை உள்ளுக்கு கொடுத்து திரிபலா கஷாயம், மஞ்செட்டி கஷாயம், வேம்பு கஷாயம் ஆகியவை கொண்டு புண்களை கழுவி தொற்றை கட்டுப்படுத்திய பின் மேற்கூறிய முறைகளை பின்பற்றலாம்.

13.பிரத்யேகமாக நிஷோ உசிராதி தைலம் வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம.

14.சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

15.சர்க்கரை நோயாளிகளுக்கு பாத வெடிப்புகள் மூலம் நோய் தொற்று உடம்புக்குள் ஊடுருவி septicaemia என்ற நிலையை உருவாக்கி உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்க வாய்ப்புள்ளதால் அவசியம் கால்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

கண் வீக்கத்தை குறைக்கும் டீ பேக்!

ஒருவரின் முகத்தில் மிகவும் வசீகரமான உறுப்பு கண் தான். ஒரு சின்ன கண் சிமிட்டலுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத்தான் பார்ப்பார்கள். சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். பட்டாம்பூச்சியின் சிறகு போல் படபடக்கும் கண்களை இந்த வீக்கம் வசீகரம் இழக்கச் செய்யும். அது ஒருவரை சோர்வானவராகவும், கவர்ச்சியற்றவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்கு சுட்டிக்காட்டும். இந்த கண் வீக்கத்தை போக்க...

*ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீஸ்பூனை ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு ஜில்லென ஆனதும் அதை எடுத்து, கண்ணுக்கு கீழே எங்கெல்லாம் வீக்கம் இருக்கிறதோ, அந்த இடங்களில் இந்த ஐஸ் ஸ்பூனை மிருதுவாக அழுத்தி ஒத்தடம் கொடுக்கவும். இதேபோல ஸ்பூனை திரும்ப திரும்ப ஃபிரிட்ஜில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் கண்களை சுற்றி இருக்கும் வீக்கம் காணாமல் போகும்.

*பாலில் டீ பேக்கை நனைத்து டீ சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அந்த டீயைக் குடித்து முடித்த பிறகு டீ பேக்கை வெளியில் எடுத்து சூடு குறைந்து ஈரப்பதத்தோடு இருக்கும் டீ பேக்கை கண்களை மூடிக் கொண்டு பத்து நிமிடங்கள் அப்படியே மேலே வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

*வெள்ளரிக்காய்க்கு வீக்கத்தை குறைக்கும் திறன் உண்டு. வெள்ளரியிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை வெட்டி கண்களை மூடிக் கொண்டு கண்களிலும், கண்களுக்கு அடியிலும் படுமாறு வைக்கவும். இது கண்களைச் சுற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கி புத்துணர்வு பெற வைக்கும்.

*மிகவும் களைப்பாக இருந்தாலோ, ஏதாவது காரணத்துக்காக உணர்ச்சிவசப்பட்டு அழ நேரிட்டாலோ, கண்களைச் சுற்றி வீங்கி விடும். இதை சரி செய்ய தூக்கமே சிறந்த வழி. 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். அவ்வாறு தூங்கி விழித்தால், வீக்கம் காணாமல் போயிருக்கும்.

தொகுப்பு: எஸ். மாரிமுத்து, சென்னை.

Related Stories: