திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில்ஸ்ரீ சரவ் சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சாய்பாபா, கர்ம வினைகளை போக்கி, பித்ரு சாபங்களை நிவர்த்தி செய்து புத்திர பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடிய வல்லமை படைத்தவராகவும், குழந்தை பாக்கியம், வேலை, கடன் தொல்லை போன்ற அனைத்து வேண்டுதலையும் நிறைவேற்றி தருபவராகவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் சீரடி சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஆரத்தியும், 7 மற்றும் 10 மணிக்கு பாலாபிஷேகமும், 11 மணிக்கு கலசாபிஷேகமும், 11.15 மணிக்கு துணி பூஜையும், 11.45 மணிக்கு சங்கல்பம், அஷ்டோத்திர ஸதாநாமாவளியும், மதியம் 12 மணிக்கு ஆரத்தியும் நடந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரமும், 6 மணிக்கு சந்தியா ஆரத்தியும், 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
8 மணியளவில் ஷோஜா ஆரத்தி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. இதில் ஜெயாநகர், திருவள்ளூர், பெரியகுப்பம், மணவாளநகர், காக்களூர், ஈக்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.