திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ராமநவமி ஆஸ்தானமும், நாளை ராமர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு இன்று ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை ரங்கநாயகர் மண்டபத்தில் சீதா, ராமர், லட்சுமணருடன் ஆஞ்சநேயர் உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளனர். இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் கருடாழ்வார் சன்னதி அருகே ராம நவமி ஆஸ்தானம் நடைபெறும். ஆஸ்தானத்தையொட்டி சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சீதா, ராமர், லட்சுமணருடன் அனுமன் உற்சவமூர்த்திகளுக்கு சகஸ்ர தீப அலங்கர சேவை நடைபெறும். இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் கருடாழ்வார் சன்னதி அருகே அர்ச்சகர்கள் ராமருக்கு பட்டாபிஷேகம் நடத்த உள்ளனர்.