குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தேவசம் தந்தரி சஜித் சங்கர நாராயணரு கொடி ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் தேவசம் கணகாணிப்பாளர் சிவகுமார், கோயில் மேலாளர் மோகன்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது. நாளை (28ம் தேதி) காலை 8 மணிக்கு நவநீத நாராயணீய சமிதி வழங்கும் நாராயண பாராயணம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி நடக்கிறது. 3ம் நாள் (29 ம்தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 6 மணிக்கு நம்மாழ்வார் குறித்து ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7.45 மணிக்கு தேவார பஜனை, 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி ஆகியன நடக்கிறது.