பவானி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தின் தலை, கை, கால் மீட்பு: ஈரோட்டில் பரபரப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்குட்பட்ட செரையாம்பாளையத்தில் பவானி ஆற்றில் நேற்று மதியம் சிலர் குளிப்பதற்காக சென்றனர். அப்போது ஆற்றில் தலை, கை, கால் இல்லாத நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கவுந்தப்பாடி போலீசார் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலை,கை, முழங்கால் வரை வெட்டப்பட்ட நிலையில் சடலம் இருப்பதால், கொலை செய்யப்பட்டு அதன் பின்பு சடலம் ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆற்றில் மீட்கப்பட்ட சடலத்தின் தோல் உரிந்த நிலையில் இருப்பதால் உடலிலும் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைத்தால், மட்டுமே அடையாளம் கண்டறிய முடியும் என்ற நிலையில் கவுந்தப்பாடி போலீசார் தலை, மற்றும் கை, காலை தேடி வந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரும் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் இரு கைகள், ஒரு கால் மற்றும் அழுகிய நிலையில் தலை என 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அடுத்தடுத்து மீட்கப்பட்டது. மற்றொரு காலை தேடி வருகின்றனர். முகம் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்டவரை வயிற்றில் குத்தி கொலை செய்த பின்பு, 2 நாட்களுக்கு பிறகு உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்து ஆற்றில் வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. கொலையானவரை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் அந்த பகுதியில் செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

Related Stories: