சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே உள்ளது சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி  கோயில் எதிரே உள்ள சாலை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.  இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோயிலில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீடு கட்டுதல், நிலப் பிரச்சனை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், அரசியல் சம்பந்தமான நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.  செவ்வாய்க்கிழமை நாட்களில்  பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் வரும் கார், வேன், ஜீப், பேருந்து என வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஆலயத்திற்கு முன்பு உள்ள சாலை இரு புறம் பூ மாலை அர்ச்சனை கடைகள், காய்கனிகள், உள்ளிட்ட நடப்பாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் பக்தர்கள் வரும் வாகனங்களால் அவ்வழியாக செல்லும் வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நாட்களில் கோயிலுக்கு ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாலையில்  கியூ வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து  சாமி தரிசனம் செய்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் பலமுறை காவல்துறையிடமும், ஊராட்சி நிர்வாகத்திடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இப்போக்குவரத்து நெரிச்சலுக்கு காரணமாக உள்ள சாலை நடப்பாதை வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்பிலே அகற்றி சாலை விரிவு படுத்தினால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலும்.  ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: