சீசன் துவங்கியதால் வாட்டர் ஆப்பிள் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.240க்கு விற்பனை

திண்டுக்கல் : ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது ‘வாட்டர் ஆப்பிள்’. இந்த வாட்டர் ஆப்பிள் மரம் ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரும். இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த பழத்திலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

மேலும் நமது உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. இந்த வகை ஆப்பிளில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பிரசவத்துக்கு பின்பு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு, உடல்வலி, சோர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் ஆகியவற்றுக்கும் ‘நீர் ஆப்பிள்’ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கொடைக்கானல் கீழ்மலை பகுதி, தாண்டிக்குடி, தடியன்குடிசை, ஊட்டி, குற்றாலம் பகுதியில் ‘வாட்டர் ஆப்பிள்’ சாகுபடி செய்யப்படுகிறது. டார்க் மற்றும் லைட் பிங்க் நிறத்தில் பழங்கள் உள்ளன. ஒரு பழம் 30 கிராம் எடை கொண்டது. இப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், புரோட்டீன், பாஸ்பரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தற்போது சீசன் நேரம் என்பதால் கொடைக்கானல், குற்றாலம் பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாட்டர் ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளது. இனிப்பு சுவை குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதையடுத்து தாடிக்கொம்பு சாலை, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘வாட்டர் ஆப்பிள்’ பழங்கள் விற்பனை தற்போது அமோகமாக நடந்து வருகிறது. கால் கிலோ நீர் ஆப்பிள் ரூ.60-க்கும், அதுவே ஒரு கிலோவாக வாங்கினால் ரூ.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரி மோகன் கூறுகையில், குற்றாலத்தில் இருந்து வருகிறது. இந்த பழங்கள் சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்திலும் விளையும்.

வாட்டர் ஆப்பிள் பழங்களை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்பதால் விற்பனை சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. உள்ளூர் மற்றும் ஊட்டியில் இருந்து வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: