முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

ஆவடி: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளூர் மத்திய  மாவட்டம் ஆவடி மாநகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராமில் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், 2000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சில்வர் குடம் என நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களில் தமிழ்நாட்டில்  ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்த வருவாய்ப் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய லியோனி, முதியோர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஆட்சி, பெண்கள் முன்னேற்றம் அடைய வைக்கும் ஆட்சி, குழந்தைகளை கல்வி கற்க வைக்கும் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி. நல்ல ஆட்சி மட்டுமல்ல இந்த நாட்டில் உள்ள அனைவரையும் மத வேறுபாடின்றி தமிழர்கள் என ஒன்றுப்படுத்தி  மதவெறிக் கூட்டத்தை இந்த நாட்டைவிட்டு விரட்டப்போகும் ஆட்சி என பேசினார்.

இந்நிகழ்சியில், பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர செயலாளர் சன்பிரகாஷ், ஆவடி பகுதி செயலாளர்கள், பொன் விஜயன், ஜி.ராஜேந்திரன், மண்டல குழு தலைவர்கள் அமுதா பேபி சேகர், ஜோதிலட்சுமி, அம்மு, கு.சேகர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: