திருப்போரூர்: மகளிர் கூட்டமைப்பு விழாவில், சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், மகளிர் தின விழா அண்ணா சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு தலைவி என்.வள்ளி தலைமை தாங்கினார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த தொழில் முனைவோராக செயல்பட்டு, சாதனை புரிந்த 10 பெண்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, பெண்கள் சுய தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகள், புதிய சுயஉதவி குழுக்களை உருவாக்குதல் ஆகியவை வழங்கப்பட்டன.