லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா போலீசில் புகார்

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தின கல் என ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை காணவில்லை என தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் தனது தங்கை திருமணத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை 3 முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை எனவும், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீடு மற்றும் தனுஷ் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு என அந்த லாக்கரை மாற்றி மாற்றி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வைர நகைகள், தங்க நகைகள் என 60 சவரன் நகைகள் காணவில்லை எனவும்  நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3.6 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரில் நகைகளை லாக்கரில் வைக்கப்பட்டிருப்பது தனது வீட்டில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: