ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புகள்: தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நெல்லை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் 1000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இதற்காக தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடம் இருந்து புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 மின் இணைப்பும், பழங்குடியினருக்கு 100 மின் இணைப்பு என மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.1.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம், ரூ.2.75 லட்சத்திற்கான பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயிரத்து 500ம், 10 எச்பி குதிரைத்திறன் மின் இணைப்புகட்டணம் ரூ.3 லட்சத்திற்கான பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீதம் பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.,

கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், அ பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம் சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ , ஏஆர் லைன் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 2 அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 0462 -2902012 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: