பிசிஓடி பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த வளரிளம் பெண்கள் முதல்  மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் வயதில் உள்ள  பெண்கள் வரை  பரவலாக  பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) பிரச்னை காணப்படுகிறது. சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத்தான் பிசிஓடி என்கிறோம். இந்தியாவில் பத்து முதல் இருபது சதவிகித பெண்கள் பிசிஓடியால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் நிபுணர். பிசிஓடி என்பது ஒரு நோயா என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளால் உருவாகிறது. இது குறித்து பெண்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

பி.சி.ஓ.டிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் டைப் 2 சர்க்கரை நோய், மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்சனைகள், எண்டோமெட்டீரியல் புற்றுநோய், கருவுறாமை உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளக்கூடும். பிசிஓடி குறித்து நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஆர்.  பிரேமலதா.

பிசிஓடி எதனால் ஏற்படுகிறது?

உணவு முறை  மாற்றம், மரபணு பிரச்சனை  மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை போன்றவற்றால் பிசிஒடி ஏற்பட வாய்ப்புள்ளது.  மரபணு பிரசனை  எனும்போது தாய்வழி, தந்தை வழியில் யாருக்கேனும்  மாதவிடாய் பிரச்னை இருந்திருந்தால்  அதன் காரணமாக அடுத்த தலைமுறையினருக்கும் இந்தப் பிரச்சனை தொடரக்கூடும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதமொரு முறை சினைமுட்டை வெடித்து வெளியேற வேண்டும்.  அப்படி வெளியேறாமல் சினைப்பையிலேயே தங்கிவிடும்போது, சினைப்பையில் சிறு சிறு நீர்க்குமிழ்கள் உருவாகின்றன. இதனால், உடலில் ஹார்மோன் கோளாறுகள் உருவாகி மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை  ஏற்படுகிறது.

பிசிஓடியின் அறிகுறிகள் என்னென்ன?

முறையற்ற  மாதவிடாய், தேவையற்ற இடங்களில் முடி வளருதல், முகப்பரு தோன்றுதல், அளவுக்கு அதிகமாக முடி கொட்டுதல், உடல் பருமனாகுதல் போன்றவை  பிசிஓடியின்  அறிகுறிகள்.  மேலும்,  மற்றொரு அறிகுறியாக, கழுத்துப்பகுதியின் பின்புறம், அக்குள் போன்ற பகுதிகளில் கருநிறத்தில் தோலில் கோடுகள் போன்று தோன்றும். இதை அகந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis Nigricans) என்று கூறுவோம். இது இன்சுலின் குறைபாட்டின் வெளிப்பாடாகும். இதுவும் பிசிஓடியின் ஒரு முக்கிய அறிகுறிதான்.

பிசிஓடியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

பொதுவாக, ஒரு பெண்ணின் சினைப்பையில் இருந்து அதிக அளவில் பெண்மையின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் (Estrogen) சிறிய அளவில் ஆண்மையின் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் (Androgen) சுரக்கும். ஆனால் பிசிஓடி பிரச்சனை ஏற்படும்போது, ஆண்ட்ரோஜென் சற்று அதிகளவில் சுரக்கிறது.  இதனால் பிசிஓடி உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போலவே மீசை, தாடி, அக்குள் பகுதிகளில் முடிகள் வளர வாய்ப்புண்டு. இந்த நிலை முற்றினால் தலை சொட்டை (Androgenic alopecia) ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே முறையற்ற மாதவிடாய்க்கும் குழந்தையின்மைக்கும் காரணமாகிறது.

பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஃபோலிக்குலர் தூண்டுதல் ஹார்மோன் (Follicular stimulating hormone - FSH) குறைவாகச் சுரக்க ஆரம்பித்துவிடும். இந்த, எஃப்எஸ்ஹெச் அளவு நன்றாக இருந்தால்தான், பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி அடையும். இல்லையெனில், கருமுட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமல், பாதி வளர்ந்த நிலையிலேயே பல முட்டைகள் சினைப்பையில் காணப்படும்.

பிசிலுடியில் பெண்ணின் மூளை, லூடினைஸிங் ஹார்மோன் (Leutinising hormone - LH) அதிகமாகச் சுரக்கும். இந்த லூடினைசிங் ஹார்மோன் சரியாக முட்டை வெளியேற்றத்துக்கு மட்டுமே தேவை. இந்த எல்ஹெச், தேவைக்கு  அதிகமாக இருப்பதாலும், முட்டைகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பதாலும், மாதவிடாயின் மத்தியில் நிகழ வேண்டிய சினைப்பையில் இருந்து முட்டை வெளியேற்றம் தடைபட்டுவிடும்.

முட்டை சரியாக வெளியேற இன்சுலினும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதுவும் பாதிக்கப்படுவதால், முட்டை வெளியேற்றம் முற்றிலும் நின்றுவிடுகிறது. எல்ஹெச் ஹார்மோன் செய்ய வேண்டிய வேலையான முட்டையை வெளியேற்றுதலை செய்ய முடியாமல்போனால், சினைப்பையில் உள்ள தீக்கா செல்கள் (Theca Cells) இன்னும் அதிகமான ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களைச் சுரக்கும். இதனால்தான் பிசிஓடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக மாதவிடாய் வராமல் போகிறது.

இதுபோன்று மாதவிடாய் சுழற்சியில், முட்டை வெளியேறாமல்போனால் கரு உருவாகுவதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான். பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிப்பதிலும்  பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை அனைத்துக்கும் மூலக் காரணம், இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்தான். இதை சரி செய்தால், ஹார்மோன் கோளாறுகள் படிப்படியாககச் சீராகிவிடும். ஹார்மோன் கோளாறுகள் சரியானாலே  பிசிஓடி கட்டுக்குள் வந்துவிடும்.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் பிசிஓடி வருகிறது. இதை, ஒல்லியானவர்களுக்கான பிசிஓடி (Lean PCOD) என்போம். இதிலும் இன்சுலின் ரெசிஸ்டென்சை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பொதுவாக, நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதப் பெண்கள் எடை அதிகமானவர்களாகவே (Obese PCOD) வகையினராகவே இருக்கின்றனர். எஞ்சிய பத்து சதவீதத்தினருக்குத்தான் ஒல்லிவகை பிசிஓடி வருகிறது.

சிகிச்சை மற்றும் உணவுமுறை

எடை அதிகமாக உள்ளவர் கட்டாயமாக டயட் கடைப்பிடிக்க வேண்டும். இதுதான் பிசிஓடி பிரச்சனைக்கு முதல் தீர்வு.  அவரவர் உயரத்துக்கு ஏற்றவாறு எடையைக் குறைக்க வேண்டும்.  இதற்காக, தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடை குறைய குறைய இன்சுலின் நன்றாகச் சுரக்க ஆரம்பிக்கும். இன்சுலின் நன்றாக வேலை செய்வதால், சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது.பிசிஓடி உள்ள பெண்களுக்கு மெட்ஃபார்மின் (Metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது இன்சுலினை வேலை செய்ய வைப்பதற்காக கொடுக்கப்படுகிறது.  இதுவே சர்க்கரைநோய் இருப்போருக்கும் பயன்படுகிறது.

பிசிஓடி உள்ளவர்கள் கறி, முட்டை வெள்ளைக்கரு, ஒமேகா 3 கொழுப்பு அதிகமுள்ள மீன்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை போதுமான அளவுக்கு உண்ண வேண்டும்.தவிர்க்க வேண்டியவை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில பெண்கள் பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பிசிஓடி என்பது வாழ்வியலில் மாற்றங்கள் வழியாக சரியாக்க சாத்தியமான பிரச்சனைதான். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்து ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தாலே பிசிஓடியை வெல்லாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: