இன்ஸ்டாவில் கத்தியுடன் வீடியோ ‘கஞ்சா தமன்னா’ அதிரடி கைது

கோவை: இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட கஞ்சா தமன்னாவை போலீசார் கைது செய்தனர். இளம்பெண் ஒருவர் ‘பிரண்ட்ஸ் கால் மி தமன்னா’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பிடித்தவாறும், பட்டாக்கத்தியுடனும் வன்முறையை தூண்டும் பாடலுடன் வீடியோ பதிவிட்டிருந்தார். விசாரணையில், இந்த வீடியோவை வெளியிட்டது, 2 ஆண்டுக்கு முன்பு கஞ்சா வழக்கில் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வினோதினி (எ) தமன்னா என்பதும், போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டதும் தெரியவந்தது. மேலும், கொலை குற்றவாளிகளுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தமன்னா மீது ஆயுத தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், தமன்னா, ‘‘நான் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது கடந்த 2 ஆண்டுக்கு முன்பு. தற்போது எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன். கணவருடன் வாழ்ந்து வருகிறேன். என்னை தேட வேண்டாம்’’ என வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரலாக பரவியது. இந்நிலையில், தமன்னா சங்ககிரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சங்ககிரி சென்று தமன்னாவை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: