தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; ஆர்வமுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்..!!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 - 23ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியது. தமிழ் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்காகவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் தேர்வு விவரங்களை சரிபார்ப்பதற்கும், அடுத்த 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு முடிகிறது. வரும் புதன்கிழமை ஆங்கில தேர்வு நடைபெறுகிறது.பொதுத்தேர்வை தமிழ்நாட்டில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14, 710 மாணவர்களும் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 185 தேர்வு மையங்களில் 45,982 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் 3, 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் என மொத்தம் 4,235 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, புழல், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ம் தேதி வரை மாணவர்களுக்கு நடைபெறுகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நாளை முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

Related Stories: