திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம் 2 நாளுக்கு விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 22-ம் தேதி உகாதி (தெலுங்கு வருடபிறப்பு) ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவைக்கு பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவியுடன் மலையப்ப சுவாமி, விஷ்வ சேனாதிபதிக்கு சிறப்பு பிரசாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆனந்த நிலையம் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோயிலுக்குள் உற்சவ மூர்த்திகள் வலம் வந்து மூலவருக்கும், உற்சவர் சிலைக்கும் புது வஸ்திரம் அணிவிக்கப்பட உள்ளது.

அதன்பின், புத்தாண்டு பஞ்சாங்கம் படிக்கப்பட உள்ளது. கருடாழ்வார் சன்னதி அருகே ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்ய உள்ளனர். உகாதி தினத்தை முன்னிட்டு மார்ச் 22-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 21ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், மார்ச் 22ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே விஐபி தரிசனத்திற்கான முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: