திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பயணிகள் மருத்துவமனையில் அனுமதி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையின் திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க 10 அடி பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று சென்னையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், மலப்பாம்பாடி கிராமம் அருகே காய்கறிகளை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திடீரென குறுக்கே வந்த வேலாயுதம் வாகனத்தின் மீது மோதாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே, பேருந்தை வலதுபக்கம் திருப்பிய பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 10 அடி பள்ளத்தில் இறங்கி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: