தனி நபர் வருமானம் வளர்ச்சி காங். ஆட்சியில் அதிகம்: கார்கே டிவிட்

புதுடெல்லி:  பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின் நாட்டில் தனிநபர் வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாஜ பொறுப்பேற்ற 2014-2015ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.86,647ஆக இருந்தது. இந்த வருமானம் 2022-2023ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 72ஆயிரமாக அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 98.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவின் தனிநபர் வருமானம் குறித்த பாஜவின் தலைப்பு செய்தி நிர்வாகத்தின் வலையில் விழ வேண்டாம்.

பாஜவின் பிரசார விளம்பரத்தை விட உங்கள் வருமானத்தை அதிகரிக்க காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் பாதுகாப்பு பலம் வாய்ந்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி ஆட்சியின் போது தனிநபர் வருமானம்  258.9 சதவீதம் உயர்ந்ததற்கான வரைபடத்தையும் அவர் இணைத்திருந்தார்.

Related Stories: