ஏலகிரி: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் வெயிலுக்கு இதமாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை கொண்ட தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் பெருமையுடைய ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடைவாசஸ்தலமாகும். இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுவதால் அதை அனுபவிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர். உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியை அடைய பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து 14 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.