இந்தூர்: பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டரானது. அதனையடுத்து களமிறங்கிய ஆஸி அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 54 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது.
இந்நிலையில் 47 ரன் முன்னிலையுடன் களத்தில் இருந்த ஹாண்ட்ஸ்கோம்ப் 7, கேமரான் 6 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். மிக மிக தாமதமாக வாய்ப்புக் கிடைத்த சுழல் அஷ்வின், வேகம் உமேஷ் ஆகியோர் நேற்று விக்கெட் அறுவடையை ஆரம்பித்தனர். எனவே ஆஸி 11 ரன் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்தது. அதனால் ஆஸி முதல் இன்னிங்சில் 76.3 ஓவரில் 197 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிபட்சமாக கவாஜா 60, லபுஷேன் 31 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா 4, அஷ்வின், உமேஷ் தலா 3 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 88ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும், கில்லை 5 ரன்னில் நாதன் லயன் போல்டாக்கினார். அதன் பிறகு லயன் ‘உறுமல்’ அதிகரித்தது. எனவே ரோகித் 12, கோஹ்லி 13, ஜடேஜா 7, ஸ்ரீகர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். மறுமுனையில் புஜாரா பொறுப்புடன் விளையாட, அவருடன் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த ஸ்ரேயாஸ் 26, அஷ்வின் 16 ரன்னில் ஆட்டமிழந்தனர்.அரைசதம் விளாசிய புஜாரா 8 வது விக்கெட்டாக 59ரன்னில் ஆட்டமிழக்க ‘‘முடிவு’’ கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. அதற்கு ஏற்ப உமேஷ், சிராஜ் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 2வது இன்னிங்சில் 60.3 ஓவருக்கு 163 ரன்னில் மீண்டும் சுருண்டது. அக்சர் 15 ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்தியா வீரர்களை அலற விட்ட லயன் 64ரன்னை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை அள்ளினார். கூடவே ஸ்டார்க், குனேமன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 2வது இன்னிங்ஸ் மூலம் 75 ரன் மட்டுமே முன்னிலைப் பெற்றது. 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை இன்று தொடங்கியது.ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கிய 2வது பந்திலேயே இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட் (49 ரன்கள், 53 பந்துகளில்) மற்றும் மார்னஸ் லபுஷேன் (28 ரன்கள், 58 பந்துகளில்) ஆகியோர் சிறப்பாக விளையாடி இலக்கை எட்டினர். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.