×

மட்டன் பிரியாணியில் ‘மியாவ்...மியாவ்...’: சென்னையில் மீண்டும் இறைச்சியுடன் கலப்படம்

பெரம்பூர்: சென்னையில் மீண்டும் மட்டன் பிரியாணியில் பூனைக்கறி கலக்கப்படுகிறது. அயனாவரம், பல்லாவரம், பாரிமுனை பகுதிகளில் அதிகமாக பூனைக்கறி விற்பனை செய்யப்படுவதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவில் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது. எதில் லாபம் சம்பாதிக்கலாம், எவ்வாறு சம்பாதிக்கலாம், எப்படி சம்பாதிக்கலாம், எதில் மாட்டிக்கொள்ளாமல் லாபம் சம்பாதிக்கலாம் என திட்டம் போட்டு பொதுமக்களை ஏமாற்றி உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து சிலர் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அந்தவகையில், பல்வேறு இடங்களில் கலப்படங்களை பார்த்த சென்னைவாசிகள், தற்போது ஆட்டு இறைச்சிகளிலும் கலப்படத்தை பார்த்து கதி கலங்கி நிற்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து கன்றுக்குட்டிகள் கடத்தி வரப்படுவதாகவும், அவை பெரியமேடு உள்ளிட்ட பல இடங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் பரவியது. மேலும் ரயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்றுக் குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு ஓட்டல்களில் மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட சில நாட்களுக்கு மக்கள் தயங்கினர். ஆனால்,  எந்த வகையான சவால்களையும் எளிதாக தாங்கிக் கொள்ளும் சென்னைவாசிகள், அதன்பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து மட்டன் பிரியாணிகளை வாங்கி சாப்பிட ஆரம்பித்தனர்.

‘சிக்கன்’ உடம்புக்கு சூடு என்று நினைத்து வெயில் காலங்களில் அதிகமாக மட்டன் சார்ந்த உணவு வகைகளை அசைவ பிரியர்கள் சாப்பிடுவது வழக்கம். மட்டனை பொறுத்தவரை அதன் விலை சென்னையில் ஒரு கிலோ ₹1000 வரை விற்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில்  ₹800லிருந்து ₹1000 வரை விற்கப்படுகிறது. விலை அதிகமாக விற்கப்படுவதால் எப்போதும் மட்டனுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்நிலையில் பல்வேறு இடங்களில் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் இறைச்சி வகைகளில் பூனைக் கறி கலக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் சில தினங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள பேருந்து நிலையம் அருகே சவுகார்பேட்டையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி என்பவர் சென்றுள்ளார். அப்போது, நரிக்குறவர்கள் இருவர் பூனைகளை பிடித்து வலையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இதுதொடர்பாக ஏழுகிணறு  காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 11 பூனைகளை மீட்டனர். மீட்கப்பட்ட பூனைகளை திருவள்ளூர் அடுத்த அம்மம்பாக்கம் பகுதியில் உள்ள விலங்குகள் நல பராமரிப்பு மையத்தில் சேர்த்தனர்.

இந்த பராமரிப்பு மையத்தை சீராணி என்பவர் நடத்தி வருகிறார். பிடிபட்ட பூனைகள் சென்னையில் பல்வேறு வீடுகளில் ஆசை ஆசையாக உரிமையாளர்களால் வளர்க்கப்பட்ட  பூனைகள் என்பதும், உரிமையாளர்களுக்கு தெரியாமல் அதிகாலை வேளையில் நரிக்குறவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பூனைகளை வலையில் பிடித்துக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இப்படி பிடிக்கப்படும் பூனைகளைக் கொன்று அதன் தோலை உரித்து சிறுசிறு பாகங்களாக வெட்டி அதை சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும், சாலையோர கடைகளுக்கும் நரிக்குறவர்கள் விற்று வருவதும், இதை வாங்குவதற்கென்று சில புரோக்கர்கள் செயல்படுவதும் தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஓட்டல்களில் மட்டன் பிரியாணி விலை குறைவாக விற்கப்படுகிறது. அங்கு மட்டனுடன் பூனைக்கறியை இவர்கள் கலப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற இறைச்சிகளுடன் பூனைக் கறியை கலந்தால் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதாலும் மட்டனுடன் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பிரியாணி போன்ற உணவுகளில் பூனைக்கறியை அதிகளவில் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அயனாவரம், பாரிமுனை, சவுகார்பேட்டை, பல்லாவரம் போன்ற இடங்களில் பூனைக்கறி வியாபாரம் நன்றாக களைகட்டி உள்ளது. பல உயர்தர அசைவ ரெஸ்டாரன்ட்களிலும் பூனைக்கறி கலப்படம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்புகளில் இருந்து பிடிக்கப்படும் பூனைகளை நரிக்குறவர்கள் வாரச்சந்தையில் பல்லாவரம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்கின்றனர். இதனை வாரந்தோறும்  ஒரு கும்பல் வந்து வாங்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரம்ப நிலையிலேயே பூனைக்கறி விவகாரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு பூனைக்கறியை வாங்கும் உணவகங்களுக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அசைவ பிரியர்களின் கோரிக்கை.

* அயனாவரம், பல்லாவரம், பாரிமுனையில் அதிகம்  உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?

* எப்படி சாத்தியம்? சென்னையில் மட்டன் ஒரு கிலோ ₹1000க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் ஒரு மட்டன் பிரியாணி ₹250லிருந்து ₹350 வரை விற்கப்படுகிறது. ஆனால் சாலையோர கடைகளில் மட்டன் பிரியாணி ₹150க்கு விற்கப்படுகிறது. இது எப்படி சாத்தியம் என்று அவர்களிடம் கேட்டால், நாங்கள் கடைக்கு ஏசி போடுவதில்லை. வாடகை கட்டுவதில்லை என்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக ₹1000 கொடுத்து மட்டனை வாங்கி ஒவ்வொரு மட்டன் பிரியாணியிலும் இரண்டு பீஸ் போட்டு விற்பனை செய்தாலும் ₹150க்கு விற்க முடியாது என சில இறைச்சி கடைக்காரர்களே தெரிவிக்கின்றனர். எனவே தெருவோர கடைகளில் சாப்பிடும்போது அசைவ பிரியர்கள் கூடுதல் கவனத்துடன் பிரியாணி வாங்கி சாப்பிட வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

* தகவல் தருவது முக்கியம்

நரிக்குறவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகளை விலங்குகள் நல ஆர்வலர் சீராணி மீட்டு அவைகளை விலங்குகள் நல காப்பகத்தில் வளர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பூனைகளை யாரோ ஒருவர் கேட்பதால்தான் நரிக்குறவர்கள் பிடித்து கொடுக்கிறார்கள். முதலில், பூனைகளை கேட்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக பூனை பிடிக்கப்படுவதை கட்டுப்படுத்தலாம். சிலர் வாரச் சந்தைகளில் பிராணிகளை வாராவாரம் விற்கின்றனர். இது தவறு. பிராணிகள் சித்ரவதை செய்யப்படுவதை பார்த்தால் கண்டிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு மக்கள் தகவல் தர வேண்டும். குறிப்பாக பூனைகளை யார் வாங்குகிறார்கள், யார் கேட்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* கடைகளுக்கு சீல் அதிகாரி எச்சரிக்கை

பூனைக்கறி விற்பனை தொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்  டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சென்னையில் பூனைக்கறி விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற கலப்படம் இருப்பதாக தெரியவந்தால் உடனடியாக 9444042322 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். அவர்களது தகவல் ரகசியம் காக்கப்படும். ஓட்டல் மற்றும் சாலையோர கடைகளில் பூனைக்கறி உள்ளிட்ட கறிகளை கலப்படம் செய்வது தெரிந்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


Tags : biryani ,Chennai , 'Meow...meow...' in mutton biryani: Meat is mixed again in Chennai
× RELATED இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக...