தாய் என்னை நரபலி கொடுக்க முயற்சி மத்திய பிரதேச இளம்பெண் பாதுகாப்பு கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: வளர்ப்புத் தாய் நரபலி கொடுப்பார் என்ற பயத்தில், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில், எனது தாய் சுதா ஷர்மா உறுப்பினராக உள்ளார். என்னையும் அந்த அமைப்பில் சேர்த்துள்ளார். எனது வளர்ப்பு தாய்க்கு மாந்தரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். என்னை, நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, எனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை. இதையடுத்து, நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர். இந்த நிலையில், என்னை எனது குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடலாம். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு கொண்டு சென்று விட்டால் அங்கு என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் இங்கு வந்துள்ளேன். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: