பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டியை 18%-லிருந்து 12% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 49-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர், மாநிலங்களுக்குக்கான ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.16,982 கோடியை விடுவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். இதில், தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 விடுவிக்கப்படுகிறது என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும், பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டியை 18% லிருந்து 12% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்று, பாக்கெட்டுகளில் உள்ள சக்கரை பாகு மீதான ஜிஎஸ்டி 18%, 5% ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அமைச்சர்கள் குழு அறிக்கை சில மாற்றங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படும் இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு செலுத்தும். இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம், அதே தொகை எதிர்கால இழப்பீட்டு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: