75வது பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு 24ம் தேதி ஓபிஎஸ் மாலை அணிவிக்கிறார்

சென்னை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24ம் தேதி சென்னையில்  உயர் கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்த நாளான வருகிற 24ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சென்னை, காமராஜர் சாலை தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்.

இதன் தொடர்ச்சியாக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 24ம் தேதி தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: