மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்காக மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி மே மாதம் தொடங்கும்: நிர்வாகம் தகவல்

சென்னை: 700 மெட்ரிக் டன் கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி மே மாதம் தொடங்க உள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (யூஜி-1 மற்றும் யூஜி-2) ஒவ்வொன்றிலும் தோராயமாக 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான சுரங்கப்பாதைகளுக்கான சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியாக ஹெரென்க்னெக்ட் என்ற ஜெர்மனி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வழித்தடம் 4ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எச்.கே. தொழிற்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் பொது ஆலோசகர் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பெயர் எஸ்1073பி ஆகும். துளை விட்டம் 6.670 மீட்டரும், 110 மீட்டர் நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை இயந்திரம்.

இந்த இயந்திரத்தின் மொத்த எடை தோராயமாக 700 மெட்ரிக் டன்கள். இது இப்போது மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திற்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் இலக்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் இதன் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில், வழித்தடம் 4ல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் கலங்கரை விளக்கம் நிலையத்தில் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் மே மாதத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்துவதற்கான பணிகள் தயாராக உள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 4ல் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் கீழ் நிலையில் தொடங்கப்பட்டு, கலங்கரை விளக்கத்திலிருந்து கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக மே 2025ல் போட் கிளப்பை வந்தடையும்.

Related Stories: