ஈரோடு: அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பாஜவை கழற்றிவிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக வேட்பாளர் யார்? என்ற குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இவரை, சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். செந்தில் முருகன் கட்சியில் பெரிய அளவில் அறியப்படாத நபராக இருந்தபோதிலும் முதலியார் சமூகத்தை சார்ந்தவர் ஆவார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பவர்கள் முதலியார்கள். ஏற்கனவே அதிமுகவில் முதலியார் சமூகத்திற்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களது சமூகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.