ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மதுரை, கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் (42). கடந்த இரு தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வென்டிலேட்டரை உடைத்து பார்த்த போது, தாயும் மகனும் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து கரிமேடு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டிலிருந்து உமாசங்கர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், ``நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை’’ என எழுதப்பட்டிருந்தது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், உமாசங்கர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு மதுரையில் இருந்தபடி மார்க்கெட்டிங் பணி செய்துவந்தார். தொழில் ரீதியாக பலரிடம் கடன் வாங்கி, ஷேர் மார்க்கெட்டிங் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இதில், இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. 10 மாதங்களாக இவர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். 10 தினங்களுக்கு முன், 2வது மனைவி அவரது தம்பியின்  திருமணத்திற்கு வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் தாயும், மகனும் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

Related Stories: