புதுடெல்லி: ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இரண்டாவது அதிகபட்ச வசூல் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 31ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,55,922 கோடி. இதில் சிஜிஎஸ்டி ரூ. 28,963 கோடி. எஸ்ஜிஎஸ்டி ரூ. 36,730 கோடி.ஐஜிஎஸ்டி ரூ. 79,599 கோடி, செஸ் ரூ. 10,630 கோடி ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாயை விட இது 24 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். 2022 ஏப்ரல் மாதம் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலானது. அதற்கு அடுத்த இடத்தை இந்த ஜனவரி பிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.