தமிழ்நாடு சுற்றுலா தலங்களின் சிறப்பு குறித்து முக்கிய விருந்தினர்களுக்கு புகைப்படங்களுடன் புத்தகம்: சுற்றுலாத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் முக்கிய  விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ளது என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி பங்கேற்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 53 ஓட்டல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப்பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. தங்கும் விடுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகிறது. மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மொத்தமாக அனைத்து அறைகளையும் பதிவு செய்பவர்களுக்கும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்குபவர்கள், வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக தங்குபவர்களுக்கு பல வகையான கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம் மற்றும் குற்றாலம், வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களுடன் உணவு விடுதிகளையும் இயக்கி வருகிறது. அதனடிப்படையில் சுற்றுலாத்துறையினால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டு சுற்றுலாத்தலங்களின் விவரங்களுடன் கண்கவர் வண்ண புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு புத்தகத்தை அமைச்சர் ராமசந்திரன் நேற்று வெளியிட்டார். இந்த புத்தகம் வரும் நாட்களில் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள முக்கிய விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

Related Stories: