காப்புக்காட்டில் 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: வாணியம்பாடி அருகே வனத்துறையினர் அதிரடி

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காப்புக்காட்டில் 500 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கொட்டி அழித்தனர். வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதியான மாதகடப்பா காரப்பட்டு காப்புக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, வாணியம்பாடி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வாணியம்பாடி வனச்சரகு அலுவலர் இளங்கோ தலைமையிலான வனத்துறையினர் நேற்று வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் 500லிட்டர் சாராய ஊறல் அடுப்பில் வைத்து எரிவூட்டப்பட்ட நிலையிலும், 70 லிட்டர் கள்ளச்சாராயம் கேன்களில் எடுத்து செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த வனத்துறையினர்,  சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்பு மற்றும் கேன்களை அடித்து நொறுக்கினர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி தப்பிச்சென்றவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: