போலீஸ் தாக்கியதில் பலியான விவகாரம் விவசாயி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் கால்துறையினர் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியதால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, செம்புலிங்கத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறி அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் டிஎஸ்பி தலைமையில் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடித்து வழக்கின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: