பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்: கோபுரங்களில் கலசங்கள் ஸ்தாபனம்

பழநி: பழநி முருகன் மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின. இதையடுத்து நேற்று கோபுரங்களில் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து, இறுதிக்கட்டத்தில் உள்ளன. மேலும் கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கின. தொடர்ந்து கோயிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன.

முன்னதாக ராஜகோபுர 5 கலசங்கள், உப சன்னதி 45 கலசங்கள் என 50 கலசங்களுக்கும் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் ஆனந்த விநாயகர் சன்னதி, தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பிற சன்னதிகளில் கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன. பக்தர்கள் பரவசம் பழநி முருகன் மலைக்கோயில் ராஜகோபுரத்தில் நேற்று கலச ஸ்தாபனம் செய்தபோது வானில் கருடன் ஒன்று வட்டமடித்தது. இதை கண்ட பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா...’ என பரவசத்துடன் சரண கோஷம் எழுப்பினர்.

Related Stories: