கொரோனாவால் தடைபட்ட சுற்றுலா விமான கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

நாகர்கோவில்: கொரோனா பரவல் காரணமாக தடைபட்ட சுற்றுலாவுக்காக விமான கட்டணத்தை நுகர்வோருக்கு திரும்ப வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் ஞானபிரகாசம். சென்னை ஆவடியில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய ஒரு குழுவாக அந்தமான் செல்ல பணம் செலுத்தியிருந்தார். சுற்றுலா நிறுவனமும் இந்த 14 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக பயணம் செய்ய இயலவில்லை. இதனால் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப தரும்படி சுற்றுலா மற்றும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை சுற்றுலா நிறுவனத்திடம் திருப்பி கொடுத்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பினர். சுற்றுலா நிறுவனம் அனுப்பிய காசோலை பணம் இல்லை என திரும்பியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி, விமான கட்டணம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் நஷ்டஈடாக ரூ..35 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.

Related Stories: