திமுக அணிகளின் பொறுப்பாளர்களாக துணை பொது செயலாளர்கள் 5 பேர் நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் உள்ள அணிகளின் பொறுப்பாளர்களாக திமுக துணை பொது செயலாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கத்தில்” திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றும் போது திமுக அணிகளின் பொறுப்பாளர்களை அறிவித்தார். அதன்படி திமுக துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி  விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை பொது செயலாளர் பொன்முடி, பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி பொறுப்பாளராகவும்,  துணைப் பொதுசெயலாளர் ஆ.ராசா மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, சட்டத்துறை அணிகளின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைப் பொது செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் தொண்டரணி, மீனவரணி, ஆதி திராவிடர் நல உரிமை பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு அணிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: