சென்னை: ஆன்லைனில் கடன் தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி ரூ.3 லட்சம் பறித்த டெல்லியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் (38) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த அக்டோபர் 2020ல் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், ‘சவுத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி வருடத்துக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருவதாக கூறினர். அதை நம்பி, நான் பல்வேறு தருணங்களில் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 500ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். அதன்பிறகு அந்த நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்களின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே, பார்வையற்ற என்னிடம் மோசடியாக பேசி பணத்தை பறித்த நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.