சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை திருவாதிரை திருவிழா கொடியேற்றம்: ஜன.6ல் ஆருத்ரா தரிசனம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை  திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (28ம் தேதி) துவங்குகிறது.

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (28ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி இன்று இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் சுவாமி அம்பாளுக்கு அனுக்ஞை அலங்காரம் நடக்கிறது.

தொடர்ந்து நாளை (28ம் தேதி) அதிகாலை 5.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும். விழாவின் 4ம் நாளையொட்டி 63 நாயன்மார்களுக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

5ம் திருநாளன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவமும், 6ம் திருநாளான ஜன. 2ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். கோயிலில் நடராஜர் படிவட்டம் இறக்கம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 7ம் திருநாளன்று இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், இரவு 11 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8ம் திருநாளன்று காலை பச்சை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9ம் திருநாளன்று காலை சுவாமி அம்பாள் கோரதத்தில் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய திருவிழாவான ஜனவரி 6ம்தேதி 10ம் திருநாளன்று ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறும். அன்று அதிகாலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு கோ பூஜையும், 5 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், அதைத்தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு சப்பர தீபாராதனையும், 9 மணிக்கு நடராஜர் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: