சென்னை: தரமணி பிலிம் சிட்டியை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ரூ.5 கோடி முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார். அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜாஜி அரிய புகைப்படக் கண்காட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டு, இன்றைக்கு கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் எல்லாம் பார்வையிட்டு வருகிறார்கள். ராஜாஜியின் 50வது ஆண்டு நினைவு என்கிற காரணத்தினால் தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் 10 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. முதல்வர் அதை இருக்கக்கூடிய பரப்பளவை வைத்து முடிந்த அளவு அதில் அடிப்படை தேவைகள் அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய வகையில், அதற்குரிய புனரமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப் பட்டிருக்கிறது.
இப்போது கூட சுமார் ரூ.5 கோடி முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினர் எதிர்பார்க்கக் கூடிய வகையில் முடிந்த அளவு அதில் அடிப்படை வசதிகளை செய்து தருவது தான் அரசினுடைய நோக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காந்தி மண்டபம் புனரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சு. இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.