சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு வசதியாக செல்ல சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்புக்கட்டண ரயில் (06021) தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும்.
அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரயிலானது திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 3.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதே போல் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06041) டிச.23ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.