அன்னூரில் தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: நீலகிரி எம்.பி ஆ.ராசா  

நீலகிரி: அன்னூரில் தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நீலகிரி எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் தாலுகாவில் 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக விவசாயிகள் மற்றும் நமது நிலம் நமதே என குழு ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசு அன்னூரில் அமைய உள்ள தொழில் பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படாது.

அங்குள்ள தனியார் நிறுவனங்களின் இடங்களில் மட்டுமே அமையும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஏற்காத விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் போராட்ட குழுவினருடன் நீலகிரி எம்.பி ஆ. ராசா தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து  எம்.பி. ஆ. ராசா விவசாயிகளிடம் பேசியதாவது: அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது. இங்கு தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் மட்டுமே தொழில் பூங்கா அமைக்கப்படும். அதுவும் தண்ணீர், நிலம், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

இங்கு ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே அதிகம் இருக்கும். இதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்படும். அந்த குழு ஒப்புதல் அளிக்கும் தொழிற்சாலை மட்டுமே அமைக்கப்படும் என அவர் கூறினார்.

Related Stories: