பல்லாவரம் அருகே வடமாநில வாலிபர் அடித்து கொலை: வீட்டை பூட்டிவிட்டு உடன் தங்கிய நண்பர் ஓட்டம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், இந்திரா நகர் கே.கே.ஷா தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷானுக்கான் (33), செவரப்கான் (32) ஆகிய 2 பேரும் வாடகைக்கு தங்கியிருந்தனர். பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இன்டீரியர் அலங்காரம் செய்யும் பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வெகுநேரம் ஆகியும் 2 பேரும் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பன்னீர்செல்வம், வீட்டின் அருகே சென்று பார்த்தார். அப்போது, வீடு பூட்டியிருந்தது.

இதனால், தன்னிடம் இருந்த மாற்று சாவி மூலம் கதவை திறந்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கே வீட்டின் படுக்கை அறையில் ஷானுக்கான் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், இதுகுறித்து உடனடியாக பம்மல், சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ரத்த காயங்களுடன் கிடந்த ஷானுக்கானை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார்.

ஆனால், அவர் அதற்குள் உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், ஷானுக்கான் உடன் தங்கியிருந்த அவரது நண்பர் செவரப்கான் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதனால், போலீசார் அவரை  வலைவீசி தேடி வருகின்றனர். செவரப்கான் பிடிபட்டால் மட்டுமே, ஷானுக்கான் எதற்காக கொலை செய்யப்பட்டார். ஏதேனும் பெண் விவகாரமா அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா போன்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: