அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர் பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை: திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் கண்டனம்

சென்னை: மாநில அரசுகள் என்றாலே ஊழலென்று கூறும் பாலகுருசாமிக்கு நாவடக்கம் தேவை என திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர்  பாலகுருசாமி, தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தவர், நீட் தேர்வை ஆதரித்தவர், இந்தி திணிப்பை ஆதரித்தவர், இப்போது பல்கலைக் கழக துணை வேந்தர் தேர்விலும் மூக்கை நுழைத்து, மோடி அரசிற்கு தனது விசுவாசத்தை காண்பித்து, வயதான காலத்திலும் பதவிக்காக காத்திருக்கிறார்.

பல்கலைக் கழகங்கள், அந்தந்த மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டவை. அந்தந்த மாநில மக்கள் தங்கள் சொந்த உழைப்பாலும், வியர்வையாலும், செலுத்திய வரியினாலும் கட்டி எழுப்பப்பட்டவை அவை. அதன் பல்கலைக் கழக துணை வேந்தரை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே உண்டு. தமிழ்நாடு முதலமைச்சர் வழிநடத்தும், திராவிட மாடல் அரசாங்கம் கூட்டுத் தலைமையை முன்வைக்கிறது. இங்கு, யார் ஊழல் செய்தாலும், புழல் சிறையில் ஒரு அறை அவர்களுக்காக காத்திருக்கும்.

எனவே, மாநில சுயாட்சி என்ற மக்களாட்சி தத்துவத்தின் மீது, தாக்குதல்கள் நடத்தி, வயதான காலத்தில் பதவியை அடையும் ஆசையை விட்டுவிட்டு அமைதியாக இருக்கலாம். அதைவிட்டு, பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் உங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக காவி அரசியலை கொண்டு வந்தால், தி.மு.க. மாணவர் அணி பார்த்துக் கொண்டு இருக்காது. ஆகவே நாவை அடக்குங்கள், பால குருசாமி. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: