கிருஷ்ணகிரியில் பரபரப்பு; பைனான்ஸ் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வாஞ்சி (எ) சதீஷ்(40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஷின் மனைவி ராதா, மாமியார் லட்சுமி, மகள் கவிஸ்ரீ உள்ளிட்டோர் இருந்தனர். இரவு 11 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல், வாஞ்சி வீட்டுக்கு வந்து வெளியே நின்றபடி சத்தம் போட்டனர்.

பின்னர் திடீரென்று கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மீது வீசினர். சத்தம்கேட்டு  வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

தகவலின்பேரில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை எடுத்து வந்து சதீஷின் வீட்டின் மீது வீசியது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சதீசுக்கும், சிலருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது.

Related Stories: