உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி!: பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் சல்மான் (22), நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் சல்மான் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நாளுக்கு நாள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அன்றிலிருந்து இன்று வரையிலான ஓராண்டில் 35 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உயிரை இழந்திருக்கின்றனர். பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம்  சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நிலையில் நண்பர்களிடம் கடனாக பணம் பெற்று ஆன்லைன் சூதாட்டம் விளையாடியுள்ளார். இதில் மொத்த பணத்தையும் அவர் இழந்ததாக கூறப்படுகிறது. பணத்தை இழந்த விரக்தியில் இருந்த சல்மான் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர் தற்கொலை குறித்து காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார்  சல்மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியான ஆன்லைன் சூதாட்ட மரணங்கள், அதிலிருந்து தப்பிக்க, அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வைத்துள்ளது. ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: