சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலி: தாம்பரம் போலீசார் விசாரணை

தாம்பரம்: சிங்கப்பெருமாள் கோயில் அருகே  ரயில் மோதி  காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (24). செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீட்டில் தங்கி, மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (20) என்பவரும் கடந்த 8 மாதங்களாக  காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமாம்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம்போல் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.   இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரி சோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் உயிரிழந்தது விபத்தா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: