திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மீன் வளர்ப்பில் மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

திண்டுக்கல்: பிரதான்  மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை  ஊக்கப்படுத்த மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும்  திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல்  மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக  2021-22ம் ஆண்டில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான  பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய மீன்வளர்ப்பு குளங்கள்  அமைத்தல், புதிய நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகம், புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தல்,  அலங்கார மீன் வளர்ப்பு, அலங்கார மீன் குஞ்சு வளர்ப்பு மற்றும் விற்பனை  அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்  மானியமும், ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும்  வழங்கப்படுகிறது.

மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச்  சேர்ந்த விவசாயிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி  இயக்குநர் அலுவலகம், நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியில் செயல்படும்  அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக  தொலைபேசி எண் 0451 2900148 அல்லது மீன் வள ஆய்வாளர் கைபேசி எண் 9384824535  என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: