மனைவியை அடித்தபோது தடுத்ததால் மாமியாரை கொன்ற மருமகன் கைது

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற மாமியாரை அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தைசேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி ஹேமாவதி (57). இவர்களது மகள் உஷா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பும் தகராறு நடந்தபோது வெளியே சென்றுவிட்டு மதிய உணவுக்கு பிரேம்குமார் வீடு திரும்பினார். அவருக்கு உஷா, தான் செய்த மீன்குழம்பு உணவை பரிமாறியுள்ளார். அப்போது பிரேம்குமார், தனது மனைவிக்கு மீன் உணவை ஊட்ட முயன்றதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உஷா, சாப்பாட்டை தட்டிவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், மனைவியை தாக்கியுள்ளார். இதில் உஷா கோபித்துக்கொண்டு அங்குள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று மதியம் மனைவியை தேடி மாமியார் வீட்டுக்குச்சென்ற பிரேம்குமார், தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் வர மறுத்த உஷாவை, அவர் மீண்டும் தாக்கியதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த மாமியார் ஹேமாவதி தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், தனது மாமியாரை அருகில் உள்ள பீரோ மீது தள்ளிவிட்டு சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த ஹேமாவதி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், ஹேமாவதி பரிதாபமாக இறந்தார். இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, இவ்வழக்கை கொலை வழக்கமாக மாற்றி பிரேம்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: